"ஆளில்லா விமானங்களின் விற்பனையால் இந்திய - அமெரிக்க உறவு வலுப்பெறும்'

இந்தியாவுக்கு 22 அதிநவீன "சீ கார்டியன்' ரக ஆளில்லா விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது, இருநாட்டு பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அந்த விமானத்தைத் தயாரிக்கும் நிறுவன அதிக
"ஆளில்லா விமானங்களின் விற்பனையால் இந்திய - அமெரிக்க உறவு வலுப்பெறும்'

இந்தியாவுக்கு 22 அதிநவீன "சீ கார்டியன்' ரக ஆளில்லா விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது, இருநாட்டு பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அந்த விமானத்தைத் தயாரிக்கும் நிறுவன அதிகாரி விவேக் லால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சீ கார்டியன் விமானங்களைத் தயாரிக்கும் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச திட்டநுட்ப மேம்பாட்டுப் பிரிவுக்கான செயல் தலைவரான அவர், சர்வதேச விவகாரங்களுக்கான அட்லாண்டிக் கவுன்சில் அமைப்பிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
200 கோடி டாலர் (சுமார் ரூ.12,800 கோடி) மதிப்பில், 22 சீ கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம், இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்.
நேட்டோ உறுப்பினர் அல்லாத ஒரு நாட்டுக்கு ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்தின் ஆளில்லா விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
மேலும் இந்தியாவுக்கு அமெரிக்கா "முக்கிய பாதுகாப்புக் கூட்டாளி' அந்தஸ்து வழங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் பாதுகாப்பு ஒப்பந்தம் இதுவே ஆகும்.
தென் சீனக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், மண்டலப் பாதுகாப்பு விவகாரத்தில் சமநிலையை ஏற்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா தனது பாதுகாப்பு நலனைத் தக்கவைத்துக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும்.
சீ கார்டியன் விமானங்கள் எம்க்யூ-9 அடித்தளத்தைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த அடித்தளம், 40 லட்ச மணி நேரம் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டு, அவற்றின் திறன் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நீடித்து உழைக்கக் கூடியவை.
எனவே, இஸ்ரேலின் ஹெரான் ரக ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்கி வந்தாலும், அந்த விமானங்களைவிட மிகுந்த செயல்திறன் கொண்ட சி கார்டியன் விமானங்களைப் போட்டியாகக் கருத முடியாது. சீ கார்டியன் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தினால் இந்தியாவின் கடற்படையின் வலிமை பெருகும். இது, இந்திய கடற்பாதுகாப்புக்கும், வலிமையை பறைசாற்றுவதற்கும் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
பாதுகாப்பு விவகாரங்கள் மட்டுமன்றி, கடற்கொள்ளை, பயங்கரவாதம், சுற்றுச்சூழல் சீர்கேடு, போதை மருந்துக் கடத்தல் போன்ற பல பிரச்னைகளை இந்தியா சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கும் சீ கார்டியன் விமானங்கள் உறுதுணையாக இருக்கும்.
இந்த ஒப்பந்தம் காரணமாக, அமெரிக்காவில் 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com