இலங்கையில் விதிகளுக்கு புறம்பாக சுற்றுலா விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த இந்தியர்கள் 27 பேரை அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்போருக்கு எதிராக இலங்கை குடியேற்றத் துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வடக்கு மாகாண தலைநகர் யாழ்ப்பாணத்தில் குடியேற்றத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 27 இந்தியர்கள், இலங்கையில் தங்களது சுற்றுலா விசா காலம் முடிந்தபிறகும், விதிகளுக்கு புறம்பாக அதிக காலம் தங்கியிருந்ததை குடியேற்றத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதேபோல், சுற்றுலா விசாவில் வருவோர், வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிக்கு புறம்பாக, 27 பேரும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து 27 பேரையும் குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
விரைவில் அவர்கள் 27 பேரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இலங்கை குடியேற்றத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முன்னதாக, வடகிழக்கு இலங்கையில் விதிக்கு புறம்பாக அதிக காலம் தங்கியிருந்த குற்றச்சாட்டின்கீழ் இந்தியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு பேஜ் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.