ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
ரஷியாவின் சோச்சி நகரில் வரும் ஆக. 23-ஆம் தேதி புதினை அவர் சந்தித்து முக்கியப் பேசுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா விவகாரத்தில் இஸ்ரேல் தலையிடாமல் இருந்து வருகிறது. அதே நேரத்தில், சிரியாவுக்கு ரஷியா ஆயுத உதவி அளிப்பதுடன், அந்நாட்டில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கும், உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கும் எதிரான தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, இஸ்ரேலைத் தூண்டும் விதமாக சிரியா கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் எல்லைப் பகுதிக்குள் குண்டு வீச்சு நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் குண்டு வீச்சு நடத்தி வருகிறது.
ரஷியாவுடன் தவறுதலாக மோதல் ஏற்படக் கூடாது என்பதால், இரு நாடுகளின் போர் விமானங்கள் பறப்பதில் தகவல் அளிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாக இஸ்ரேல் - ரஷியா இடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரங்கள் குறித்து நெதன்யாஹு - புதின் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.