சியரா லியோன் நாட்டில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 441-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சியரா லியோனின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 441-ஆக அதிகரித்துள்ளது. பல சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயிருந்தது. மேலும், வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வரும் ஆயிரக்கணக்கானோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று சியரா லியோன் அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெள்ளப் பேரழிவில் சிக்கி 122 குழந்தைகள் உயிரிழந்தகாகவும், மேலும், 123 குழந்தைகள் பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிடும் விதமாக பிரிட்டன் 64.5 லட்சம் டாலரும், சீனா 10 லட்சம் டாலரும், டோகோ 5 லட்சம் டாலரும் நிதி உதவி அளித்துள்ளன. மேலும், செஞ்சிலுவை சங்கம் சார்பிலும் அவசரகால நிதி உதவி கோரப்பட்டுள்ளது.