காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலில் உள்ள ஷியா மசூதி ஒன்றுக்குள் இன்று நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.
காபுல் நகரின் மையப்பகுதியில் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் காலா-நஜாரா என்னும் மசூதி அமைந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வாரத் தொழுகைக்காக ஏராளமானவர்கள் அங்கு கூடி இருந்தனர்.
அப்போது மசூதிக்குள் திடீரென்று துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம் கேட்டது. மற்றவர்கள் சுதாரிக்கும் முன்னர் தொழுகை நடத்தி கொண்டிருந்தவர்கள் மத்தியில் இருந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தான்.
இந்த கோர தாக்குதலில் மசூதியில் தொழுகை நடத்திய மதகுரு உள்பட 14 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.