காஞ்சிபுரத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற 3 பேர் அங்கு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மண்டபம் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (58). ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி ஊழியர். இவரது மனைவி வள்ளி (56). இவர்களின் மகன் மனோரஞ்சன் (34), தனது மனைவி சங்கீதாவுடன் (30) லண்டனில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி தனது மனைவியுடன் பன்னீர்செல்வம், காஞ்சிபுரத்தில் இருந்து புது தில்லி சென்று, அங்கிருந்து தனது தங்கை தமிழ்மணி (50), அவரது கணவர் அருள்செல்வம் ஆகியோருடன் லண்டனுக்கு சென்றார்.
இந்நிலையில், பன்னீர்செல்வம், வள்ளி, அருள்செல்வம், தமிழ்மணி, மனோரஞ்சன், சங்கீதா மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 12 பேர் லண்டனில் உள்ள பக்கிங்காம் பகுதியில் மினி பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பன்னீர்செல்வம், அருள்செல்வம், தமிழ்மணி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். வள்ளி, மனோரஞ்சன், சங்கீதா ஆகியோர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த உறவினர்கள் இந்திய தூதரகம் மூலம் இங்கிலாந்து தூதரகத்தைத் தொடர்பு கொண்டு சடலங்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.