பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கை நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
ஆசிப் அலி ஜர்தாரி பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தபோது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஜர்தாரியின் வழக்குரைஞர் பாரூக் நாயக், சர்தாரிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் பெரும்பாலானவை நகல்களாக இருப்பதால் அவை ஏற்றுக் கொள்ள முடியாதவை. மேலும், இது மிகவும் பழைய வழக்கு என்பதால் சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் வழக்கு தொடர்பான பல விவரங்கள் தங்களுக்கு நினைவில்லை என்று தெரிவித்துள்ளனர். இவற்றைக் கருத்தில் கொண்டு ஜர்தாரியை விடுவிக்க வேண்டும் என வாதாடினார். இறுதியில், வழக்குரைஞரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி காலித் முகமது ரஞ்ஜா, ஜர்தாரியை ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.