ஆர்டிக் பனிப்பிரதேசப் பகுதியான ஸ்வால்பார்ட் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வடதுருவத்தில் இருந்து சுமார் 1,600 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. பெல்ஜியம் நாட்டை விட இரண்டு மடங்கு பெரியது.
இங்கு கடந்த 1973-ம் ஆண்டு முதல் பனிக்கரடி பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இங்கு 1,000-க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் வாழ்ந்து வருகின்றன. எனவே இங்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஒரு குழுவுடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் 900 மீட்டர்கள் இடைவெளியில் ஒரு பனிக்கரடி இருப்பதைக் கண்டார். அதனை அருகில் காண்பிக்கும் ஆர்வத்தில் சுற்றுலாப் பயணிகளை அருகில் அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், இந்தக் குழுவைப் பார்த்த அந்த பனிக்கரடி அந்த இடத்தில் இருந்து பயந்து ஓடிவிட்டது. இச்சம்பவங்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்த அரசாங்கம் அந்த சுற்றுலா வழிகாட்டிக்கு 1,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம்) அபராதம் விதித்தது.
விதிகளின் படி பனிக்கரடிகளை தொல்லை செய்வது சட்டப்படி குற்றமாகும். அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை. எனவே விதிமீறிய குற்றத்துக்காக அந்த சுற்றுலா வழிகாட்டிக்கு அபராதம் விதிப்பதாக ஸ்வால்பார்ட் ஆளுநர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.