சிரியா ராணுவத்துக்கும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 24 மணி நேரமாக நடைபெற்ற சண்டையில் 64 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை கூறியதாவது:
சிரியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரக்கா நகரிலிருந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள டெய்ர்-எஸ்ஸாரை நோக்கி ராணுவம் முன்னேறத் தொடங்கியுள்ளது.
எனினும், சிரியாவில் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே மாகாணமான டெய்ர்-எஸ்ஸாரைப் பாதுகாக்க ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
இந்தச் சண்டையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரு தரப்பிலும் 64 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 28 பேர். 26 பேர் அரசு ஆதரவுப் படையினர் ஆவர்.
கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வரும் உக்கிர சண்டையில் ஒட்டுமொத்தமாக 145 பேர் உயிரிழந்தனர்.
ரக்கா மாகாணத்தின் கிழக்கே அமைந்துள்ள யூஃப்ரடீஸ் நதியையொட்டிய கிராமங்களில் இந்த சண்டை நடைபெற்று வருகிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அரசுப் படையினருடன் மிகக் கடுமையான சண்டை பல மணி நேரங்களாக நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.