அமெரிக்காவின் அதிபர் வசிப்பதற்கென வாஷிங்டனில் வெள்ளை மாளிகை குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர் தன்னுடைய குடும்பத்துடன் இங்கு வசிப்பது வழக்கம்.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களின் தனி அறைகளும் இங்கு செயல்படுகின்றன. மேலும் இங்குதான் அமெரிக்க அரசாங்கத்தின் தலைமையகம் உள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகை குடியிருப்பில் சமீபகாலமாக கரப்பான்பூச்சிகள் மற்றும் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முக்கிய நிர்வாக அறையில் 4 இடங்களில் கரப்பான்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. மூத்த அதிகாரிகளின் அறைகளில் எறும்பு, மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செயல்பட்டு வரும் அதிபரின் நிர்வாக இடம், கப்பல்படையின் உணவகம், விருந்தினரை வரவேற்கும் அறை உள்ளிட்டப் பகுதிகளில் எலிகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை முழுவதும் பணிபுரியும் ஊழியர்கள் தரப்பில் இந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட முறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பொது சேவை நிர்வாகம் தரப்பில் வெள்ளை மாளிகையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை உடனடியாக சீர்செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும் சதுர அடிக்கு 2.13 டாலர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 1 லட்சம் டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகை சீரமைப்புக்காக செலவிடுவதாகவும் கூறியுள்ளது.
இதனிடையே கடந்த முறை ஒபாமா ஆட்சிக்காலத்தில் 2016-ம் ஆண்டு முதல் வெள்ளை மாளிகை சீரமைப்பு தொடர்பான கோரிக்கையை முன்வைத்து வருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.