லண்டன்: தன்னை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ஆஜர் ஆனார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தொழில் வளர்ச்சிக்கு என்று கூறி பல்வேறு இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி அளவுக்கு கடன் பெற்றார். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பியளிக்காத அவர், பண மோசடியில் ஈடுபட்டார். அது தொடர்பாக இங்கு அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார்.
எனவே நீதிமன்ற வழக்குகளை சந்திக்க ஏதுவாக அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி லண்டன் புறநகர் பகுதி ஒன்றில் சில மாதங்களுக்கு முன் அவரை ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று துவங்கி வரும் 14–ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்காக இந்திய விசாரணை ஆணைய அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கின் தீர்ப்பு 2018 - ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.