கைப்படம் (செல்ஃபி) எடுத்து சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்தோனேசியாவைச் சேர்ந்த குரங்குக்கு 'பீட்டா' அமைப்பு 'இந்த ஆண்டின் மிகச் சிறந்தவர்' விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள காடுகளில் படமெடுக்க வந்திருந்த பிரிட்டன் புகைப்படக் கலைஞர் டேவிட் ஸ்லேட்டரின் கேமராவை, அரிய வகைக் குரங்கு ஒன்று எடுத்து இயக்கியது. அப்போது அதன் வித்தியாசமான முகம் கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவானது. அந்தப் படங்களை டேவிட் ஸ்லேட்டர் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிட்டதும், அவை சர்வதேச அளவில் மிகவும் புகழடைந்தன.
இந்த நிலையில், குறிப்பிட்ட அந்தக் கைப்படங்களை எடுத்தது குரங்குதான் எனவும், எனவே அந்தப் படங்களுக்கான பதிப்புரிமையை டேவிட் ஸ்லேட்டர் பயன்படுத்தக் கூடாது எனவும் சர்வதேச விலங்குகள் உரிமைகள் அமைப்பான 'பீட்டா' அமைப்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் டேவிட்டுக்கு வெற்றி கிடைத்தாலும், அதனைத் தொடர்ந்து 'பீட்டா' மேல்முறையிடு செய்யவே நீதிமன்றத்துக்கு வெளியிலேயே இந்த விவகாரம் முடித்துக் கொள்ளப்பட்டது.
குரங்கின் கைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தை இந்தோனேசியக் காடுகளில் உள்ள அரிய வகைக் குரங்குகளின் பாதுகாப்புக்காக அளிக்க டேவிட் ஒப்புக் கொண்டார்.
இந்தச் சூழலில், பதிப்புரிமை வழக்கின் மூலம் ஒரு விலங்குக்கு மனிதர்களுக்கான உரிமை உள்ளதா, இல்லையா என்ற விவாதத்தை உலக அளவில் முதல் முறையாக எழுப்பியதற்காக, 'இந்த ஆண்டின் மிகச் சிறந்தவர்' என்ற பட்டத்தை கைப்படக் குரங்குக்கு அளிப்பதாக 'பீட்டா' அமைப்பு அறிவித்துள்ளது.