அமெரிக்க பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
நியூ மெக்ஸிகோ மாகாணம், அஸ்டெக் நகரில் உள்ள அஸ்டெக் உயர்நிலைப் பள்ளிக்குள் வியாழக்கிழமை புகுந்த மர்மநபர் அங்கிருந்த மாணவர்கள் நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். வேறு எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மர்மநபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தையடுத்து, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நடப்பு ஆண்டில் இதுவரையில் பலியான, காயமடைந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 3,700 ஆகும்.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கிக்கு 33,000க்கும் மேற்பட்டோர் இரையாகின்றனர். இதில், 22,000 பேர் துப்பாக்கியால் சுட்டுத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக, நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.