காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 15 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் வியாழக்கிழமை கிளர்ச்சியாளர்கள் இந்தக் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினர். அண்டை நாடான தான்சானியாவிலிருந்து வந்த ஐ.நா. அமைதிப்படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், அமைதிப்படையைச் சேர்ந்த 15 வீரர்களும், காங்கோ ராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
மேலும், 53 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வடக்கு கிவு மாகாணத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் உகாண்டா இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கோ தாக்குதலுக்கு ஐ.நா. பொது செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், அமைதிப்படையினருக்கு எதிரான மனிதாபிமானமற்ற இந்த செயல் போர்க் குற்றத்துக்கு ஒப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.