தென் கொரியாவில் உள்ள வங்கியில் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க டாலர் கள்ளநோட்டு வட கொரியாவில் அச்சிடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள வங்கிக் கிளையில் 100 அமெரிக்க டாலர் கள்ளநோட்டு ஒன்று கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதிநவீன அச்சுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அது உண்மையான கரன்சி போலவே பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக இருந்தது என்று அதனை ஆய்வு செய்தவர்கள் கூறினர்.
'சூப்பர் நோட்டு' என்று அறியப்படும் இதுபோன்ற கள்ளநோட்டுகளை வழக்கமான கிரிமினல் கும்பல்கள் உருவாக்க முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அது போன்ற நோட்டுகளை உருவாக்கும் அச்சு இயந்திர வசதிகளை அமைக்க ரூ. 600 கோடிக்கு மேல் செலவாகும். அந்த வகையான முதலீடுகளில் கிரிமினல் கும்பல்கள் ஈடுபடுமா என்பது சந்தேகம்தான். இதையடுத்து, வட கொரியா இந்தக் கள்ளநோட்டை உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த நாடு மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், வட கொரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அமெரிக்க டாலர் கள்ளநோட்டை மீண்டும் அச்சிடத் தொடங்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.