ஜகார்தா: இந்தோனேசியாவில்இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் ரயில் தண்டவாளம் அருகே நின்று செல்பி எடுத்த போது, ரயிலில் கீழ்ப்பகுதி தலையில் தட்டியதில் தலை பிளந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்தோனிசியாவில் தோழிகள் நால்வர் ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று செல்பி எடுத்துக் கொள்ள முடிவு செய்தனர். அதற்காக ரயில் வரும் சமயத்தில், ரயிலுக்கு வெகு அருகில் தண்டவாளம் ஓரமாக அமர்ந்த நிலையில் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதற்காக அவர்கள் செல்பி ஸ்டிக் மூலம் முயற்சித்துள்ளனர்.
அப்பொழுது நால்வரில் பின்னால் தண்டவாளத்தின் அருகே அமர்ந்திருந்த எலி ஹயாதி (16) என்ற பெண் சற்று நிமிர்ந்து அந்த புகைப்படத்திற்குள் வர முயற்சி செய்துள்ளார். அப்பொழுது விரைந்து வந்த ரயிலின் அடிப்பகுதி அவரைத் தட்டியுள்ளது. இதனால் அவர் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டு சரிந்து விட்டார்.
முதலில் நிலைமையின் தீவிரத்தை உணராத தோழிகள் அவரைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தனர். அதன் பின்னரே எலி ஹயாதி உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் எலி ஹயாதியினை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் கபாலம் பிளந்து மூளை தெரியும் அளவில் காயம் உள்ளது என்றும், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அவர் தொடர்ந்து அபாயக் கட்டத்திலேயே உள்ளார்.