காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இஸ்லாமியப் பள்ளி ஒன்றின் வளாகத்தில் வியாழன் அன்று காலை நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறியதாவது:
காபூலின் காலா இ-நசர் என்னும் பகுதியில் வியாழன் அன்று காலை 10.30 மணியளவில் இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இஸ்லாமியப் பள்ளி ஒன்று அமைந்திருந்த வளாகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அதே வளாகத்தில் சடா இ-ஆப்கானிஸ்தான் என்னும் செய்தி நிறுவன அலுவலகமும் அமைந்துள்ளது.
இந்த தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.