கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு எகிப்தின் ஹெல்வான் மாவட்டத்தில் அமைந்துள்ள மார் மினா தேவாலயத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், தேவாலயத்தின் வெளியே திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
இதனால், சம்பவ இடத்திலேயே இரண்டு போலிஸார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அப்போது அங்கிருந்த போலிஸாரால் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, ஏப்ரல் மாதம் இதேபோன்று இருவேறு தேவாலயங்களின் வெளியே நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 45 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள எகிப்து நாட்டில் வெறும் 10 சதவீதத்துக்கும் குறைவான அளவில் கிறிஸ்துவர்கள் சிறுபான்மை அமைப்பாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.