நியூயார்க்: பிரபல சமூகவலைதளமான டிவிட்டரில் குறிப்பிட்ட சில கருத்துக்களை கொண்ட ட்வீட்டுகள் மர்மமான முறையில் நீக்கப்படுவதால் அதன் பயனாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பிரபல சமூகவலைதளமான டிவிட்டரில் பொதுவாக மற்றவர்களை அவதூறு செய்யும் வகையில், வெறுப்பைத் தோன்றும் வகையில் அல்லது சர்ச்சைக்குரிய கருத்துக்கள கூறும் வகையிலான ட்வீட்டுகள் கணிசமான அளவில் பகிரப்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்துவதை ஒரு முக்கிய பணியாக, தொடர் செயலாக மேற்கொள்வோம் என்று ட்வீட்டர் தலைமை சமீபத்தில் அறிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக தற்போது அவ்வாறு அவதூறு நோக்கில் பதியப்படும் கருத்துக்களை கொண்ட ட்வீட்டுகள் 'ஆவி' செயல் போன்று மர்மமான முறையில் நீக்கப்படுகின்றன என்று பயனாளர்களிடையே புகார் எழுந்துள்ளது.
உதாரணமாக ஒருவர் அவ் வாறான கருத்தை ட்வீட் செய்தால் அது அவருடைய பக்கத்தில்மட்டும்தான் தெரியும்.பிறர் யாரும் அதனை பார்க்க முடியாது. யாரேனும் அதனை பார்க்க முயன்றால் பிழை செய்தி ஒன்று மட்டுமதான் காட்டப்படும்.
ஆனால் சில சமயங்களில் எந்த வித சர்ச்சையும் இல்லாத சாதாரண ட்வீட்டுகளும் நீக்கப்படுவதாகவும் சிலர் புகார் தெரிவிக்கின்றனர்.