பனாமா ரகசிய ஆவணங்களின்படி வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது.
இந்தத் தீர்ப்பில்தான் நவாஸின் எதிர்கால அரசியல் வாழ்க்கையே அடங்கியிருக்கிறது என்பதால், அதை உலக நாடுகள் அனைத்தும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
பனாமா நாட்டை தலைமையகமாகக் கொண்ட மொசாக் ஃபொன்சேகா என்ற சட்ட அமைப்பு, பெரு நிறுவனங்களுக்கும், சர்வதேச வங்கிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை அளித்து வந்தது. மொசாக் ஃபொன்சேகா வசம் இருந்த பல்வேறு நிறுவனங்களின் பணப் பரிவர்தனைகள், வர்த்தகத் தொடர்புகள், ரகசிய வங்கிக் கணக்குகள் ஆகியவை குறித்த ஆவணங்களில் பெரும்பகுதியை ஜெர்மன் பத்திரிகையொன்று கடந்த 2015-இல் வெளியிட்டது.
அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்களும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்பட 500 இந்தியர்களும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நவாஸýக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளது.
விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப் போவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.