வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சீன பயணத்தை முடித்துக் கொண்டு இருநாள் பயணமாக வங்கதேசத்துக்கு சென்ற ஜெய்சங்கர், தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவின் தற்கால நிகழ்வுகள் குறித்து ஆலோசித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து வங்கதேச அரசின் ஊடகத் துறை துணை செயலாளர் நஸ்ரூல் இஸ்லாம் கூறியதாவது:
இருநாடுகளின் எல்லையில் நிலவி வந்த பிரச்னைகள் உள்பட பல்வேறு விவகாரங்களையும் இருநாடுகளும் பேசித் தீர்த்துக் கொண்டுள்ளன. இதேபோல எதிர்காலத்திலும் பிரச்னைகள் அனைத்தும் அமைதியாகப் பேசித் தீர்க்கப்பட வேண்டுமென்று ஜெய்சங்கரிடம், ஷேக் ஹசீனா கூறினார்.
வரும் ஏப்ரல் மாதம் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ஹசீனா, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், தீஸ்தா நீர் பகிர்வு பிரச்னை காரணமாக, அவரது பயணம் அப்போது ஒத்திவைக்கப்பட்டது என்றார் அவர்.