பயிர்க் கடன் வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நாட்டறம்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத் தலைவரான இளங்கோவனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இளங்கோவன் அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளராகவும் கட்சி பொறுப்பு வகிக்கிறார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி ஜங்காலபுரம் கோவிந்தன் வட்டத்தைச் சேர்ந்தவர் சிவா (47). விவசாயியான இவர் நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இதில், ரூ.60 ஆயிரம் கடன் பெற அனுமதி கிடைத்தது. இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கத் தலைவரான டைகர் இளங்கோ (45), சிவாவிடம் பயிர்க்கடன் வழங்க தனக்கு 10 சதவீதம் கமிஷனாக ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவா, இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரிடம் ரசாயனப் பவுடர் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட சிவா, வெள்ளிக்கிழமை காலையில் இளங்கோவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஓழிப்பு கூடுதல் ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியம், போலீஸார் இளங்கோவை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அலுவலகத்தில் இருந்த சங்கச் செயலாளர் நாகராஜ், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரிடம் 5 மணி நேரம் தனித்தனியே விசாரணை நடத்தினர். இதையடுத்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இளங்கோவை கைது செய்து, வேலூருக்கு அழைத்துச் சென்றனர்.