ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாண்டங் நகரத்தில் இன்று காலை நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியதால் பதற்றம் நிலவுகிறது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாண்டங் நகரம் உள்ளது. இங்கு நிறைய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இன்று காலை அங்குள்ள ஒரு பூங்காவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அங்கிருந்த அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து அவற்றை கைப்பற்றினர். உள்ளே இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அலுவலகத்தை சுற்றி வளைத்தனர்.
இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு மற்றும் வெடி குண்டு வீச்சு நடந்ததால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனிடையே அங்கிருந்த தீவிரவாதிகள் அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.
அவர்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த போலீசார் தீவிரமாக முயன்ற நிலையில் டி.வி. நிலையத்தையம் தீவிரவாதிகள் மர்மநபர்கள் கைப்பற்றினர். ஆனால் இதற்கு எந்த ஒரு தனிப்பட்ட தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்காத நிலையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.