ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஆங்கே துறைமுகத்தில் இருந்து இன்று காலை நூற்றுக்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற இயந்திரப் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்துபேர் பலியாகினர்.
இந்தோனேசியா நாட்டில் சாலை போக்குவரத்து வசதிகளை காட்டிலும் அதிகமான நீர் வழி படகு போக்குவரத்தையே மக்கள் பெரும்பாலும் நம்பியுள்ளனர். ஆனால் அங்கு மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால் இருக்கும் குறைந்த அளவு படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லபப்டுகின்றனர்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவின் வடபகுதியில் உள்ளது முவாரே ஆங்கே துறைமுகம். இங்கிருந்து இன்று காலை நூற்றுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றியபடி ஒரு இயந்திரப் படகு அருகில் உள்ள ஆயிரம் தீவுகள் பகுதிக்கு சென்றது.
படகு புறப்பட்ட சிறிது நேரத்தில் படகின் என்ஜின் பகுதியில் இருந்து கிளம்பிய தீப்பிழம்பு, படகு முழுவதும் பரவியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பயணிகள் உயிர் பிழைக்கும் பொருட்டு கடலுக்குள் குதித்தனர். இருந்த போதிலும் வேகமாக பரவிய தீயில் சிக்கிய 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோரக் காவல் படையினர் கடலில் உயிருக்குப் போராடிய 98 பேரை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.