இந்தோனேசியாவில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த படகு தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோகோ தெரிவித்ததாவது: தலைநகர் ஜகார்தாவிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது டிடுங் தீவு. இந்தத் தீவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வாடிக்கை. புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை ஜகார்தாவிலிருந்து 200 பயணிகளை ஏற்றிக் கொண்டு டிடுங் தீவுக்கு படகு ஒன்று சென்றது. அந்தப் படகு நடுவழியில் எதிர்பாராத விதமாக தீ விபத்துக்குள்ளானது.
சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் தீப்பிடித்த படகிலிருந்து ஏராளமான பயணிகளை மீட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் 23 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 17 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றார் அவர். பலியானவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. வெளிநாட்டினர் உள்பட அந்தப் படகில் சுமார் 230 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.