பிரேஸில் சிறைக்குள் கைதிகளுக்கு இடையே நடந்த கடும் மோதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இத்தகைய வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த பிரேஸில் சிறைத் துறை தவறிவிட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கெனவே, அளவுக்கு அதிகமான கைதிகள் அந்நாட்டுச் சிறைகளில் அடிப்படை வசதிகளின்றி அடைக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், தற்போது நேர்ந்துள்ள இந்தச் சம்பவம் புதிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
பிரேஸிலின் அமேசான் மாநிலத்தில் அமைந்துள்ளது மானஸ் சிறைச்சாலை. இங்கு பல்லாயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுந்த வாக்குவாதம் சண்டையாக மாறியது. பிறகு அது கடும் மோதலாக மாறி சிறை வளாகமே கலவர பூமியானது. பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறைக் காவலர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த மோதல் சம்பவத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்து விட்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
குறைந்த இடவசதி கொண்ட பிரேஸில் சிறைச் சாலைகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்களாவர். அந்நாட்டு சிறைகளுக்குள் அடிக்கடி மோதல் வெடிப்பதும், அதனால் கைதிகள் இறப்பதும் தொடர்கதையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.