டோக்கியோ: தென் கொரியாவின் பூசன் சிட்டி நகரத்தில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் சர்ச்சைக்குரிய பெண் சிலை ஒன்று அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் தனது தூதரக அதிகாரிகள் இருவரை அங்கிருந்து ஜப்பான் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.
தென் கொரியாவின் பூசன் சிட்டி நகரத்தில் ஜப்பானின் தூதரக அலுவலகம் அமைந்துள்ளது.இந்த அலுவலகத்தின் வெளிப்பகுதியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டைச் சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான குழு ஒன்று 'சுகம் தரும் பெண்' எனப்படும் சிலையொன்றை நிறுவியது. இந்த சிலையானது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான் ராணுவ வீரர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, பாலியல் அடிமைகளாக கொரிய பெண்கள் வலுக்கட்டாயாமாக பயன்படுத்தப்பட்ட சம்பவத்தைநினைவு கூறும் விதமாக உள்ளதாக ஜப்பான் கருதியது.
இந்த நடவடிக்கை இருநாடுகளுக்கிடையேயான உறவில் கசப்பை உண்டாக்குவதாகக் கூறிய ஜப்பான், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டில் பணியாற்றி வந்த தென்கொரியாவுக்கான ஜப்பானிய தூதர் மற்றும் அங்குள்ள தூதரக அதிகாரி இருவரையும் திரும்பபெற்றுக் கொண்டுள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கிடையே நடக்கவிருந்த பணப்பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பொருளாதார பேச்சுவார்த்தை ஆகியவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை ஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் யோஷிதே சுகா தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் இந்த நடவடிகை வருத்தம் அளிப்பதாக தென் கொரியா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.