யாமோவ்சோக்ரோ (ஐவரி கோஸ்ட்): ஐவரி கோஸ்ட் நாட்டில் சம்பள உயர்வு வேண்டும் என்று கோரி அந்நாட்டு ராணுவ அமைச்சரை ராணுவ வீரர்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்று ஐவரி கோஸ்ட். இந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றிவரும் அதிகாரிகளும், வீரர்களும் சம்பள உயர்வு, வீட்டு வசதி, போனஸ் மற்றும் பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் ராணுவ வீரர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் நாட்டின் முக்கிய நகரான புவாக்கே நகரில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்கை வெள்ளிக்கிழமை அன்று சூறையாடிய போராட்டக்காரரகள், அங்கிருந்த சிறியரக ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளை அள்ளிச் சென்றனர்.
ராணுவ வீரர்களின் இந்த போராட்டமானது ஐவரி கோஸ்ட்டின் பொருளாதார தலைநகரமான அபிட்ஜான் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் பரவியது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீர்ர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டின் அதிபர் உத்தரவின் பேரில் ராணுவ அமைச்சர் அலைன் ரிச்சர்ட் டான்வாஹி, தலைநகர் யாமோவ்சோக்ரோவில் இருந்து நேற்று புவாக்கே நகருக்கு வந்தார்.
அங்குள்ள ராணுவ தலைமையகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அவர் காத்திருந்தபோது உள்ளே புகுந்த ராணுவ வீரர்கள், அலைன் ரிச்சர்ட் டான்வாஹி மற்றும் அவருடன் வந்திருந்த தலைமை அதிகாரிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர். சுமார் இரண்டு மணிநேர சிறைபிடிப்புக்கு பின்னர் அமைச்சரை போராட்டக்காரர்கள் விடுவித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து தலைநகர் யாமோவ்சோக்ரோவுக்கு விரைந்து சென்றார்.