சிரியா போர் விமானங்கள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்தது.
சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
அல்-காய்தா குழுவுடன் தொடர்புடைய ஃபதே அல்-ஷாம் முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்தனர்.
அங்கு பயங்கரவாதிகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. அந்தத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுடன் போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ள போதிலும், ஃபதே அல்-ஷாம், இஸ்லாமிய தேசம் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிரியாவின் மேற்குப் பகுதியில் பல்வேறு இடங்களை ஆக்கிரமித்துள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக சிரியா போர் விமானங்கள், அதற்குத் துணையாக ரஷிய போர் விமானங்களும் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன. இராக்கையொட்டிய சிரியா எல்லைப் பகுதிகளில் அமெரிக்க கூட்டுப் படையைச் சேர்ந்த போர் விமானங்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.