இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பரசினார் பகுதியில் உள்ள காய்கறி சந்தையொன்றில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர்.50 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் குர்ரம் மாகாணத்தில் பரசினார் பகுதியில் அமைந்துள்ளது எய்த்கா காய்கறி சந்தை.அந்த பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய சந்தை இதுவாகும். இன்று காலை அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியானார்கள்.மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 'தெரீக் ஈ தாலிபான்' என்னும் தீவிரவாத இயக்கம் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. கடந்தவாரம் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 'லஷ்கர் ஈ ஜங்க்வி' தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆசிப் சுட்டோவின் மரணத்திற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.