ஜெர்மனியில் சரக்கு வாகனத்தின் மீது பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸார் தெரிவித்தது: ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள ஸ்டாம்பாக் அருகே நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை சுமார் 7 மணிக்கு (உள்ளூர் நேரம்) சுற்றுலாப் பயணிகளுடன் வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதையடுத்து, அந்த இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. நெடுஞ்சாலையில் உடனடியாகத் தீயணைப்புக்கு வழியில்லாததால், தீ வேகமாகப் பரவி இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீக்கிரையான பேருந்திலிருந்து 31 பேர் மீட்கப்பட்டனர். பதினேழு பேர் தீக்கிரையாகினர். அந்தப் பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள் உள்பட 48 பேர் இருந்தனர்.
நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்ததைக் குறித்து வாகன ஓட்டிகள் தகவல் அளித்ததையடுத்து, தீயணைப்புப் படை வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்தன. தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலத்த தீக்காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று போலீஸார் கூறினர்.