நியூயார்க்: தனது அண்டை வீட்டுக்காரர் போட்ட 'பேஸ்புக்' சண்டை விபரீதமாகி, நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுமி ஒருவர் அநியாயமாக உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள டயட்டனைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி மக்கீனா க்ரோன்பெர்கர். இவரது பக்கத்து வீட்டுக்காரன் ஜேசன் டிட்வெல் (18). இவனுக்கும் டைலான் ஏஞ்சல் (18) என்பவனுக்கும், பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஒரு விஷயம் தொடர்பாக சண்டை உருவானது. அதில் வாக்குவாதம் முற்றி இருவரும் நேரில் சந்தித்து சண்டையிட்டுக் கொல்வதென முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த புதன்கிழமை அன்று இருவரும் டிட்வெல் வீட்டுக்கு அருகே சந்தித்துக் கொண்டனர். அப்பொழுது இருவரும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டனர். கோபமுற்ற டிட்வெல் வீட்டுக்கு உள்ளே சென்று, துப்பாக்கி ஒன்றினை எடுத்து வந்து ஏஞ்சலை நோக்கி சுடத் துவங்கினான்.
ஏஞ்சலும் தனது காருக்கு உள்ளே இருந்து துப்பாக்கியினை எடுத்து வந்து, டிட்வெல் வீட்டினை நோக்கி சரமாரியாக சுடத் துவங்கினான். இதில் ஒரு குண்டு தவறுதலாக சிறுமி மக்கீனாவின் வீட்டு படுக்கையறை வழியாக அவரைத் தாக்கியது. இதில் அவர் துடி துடித்து பலியானார்.
உடனடியாக ஜேசன் டிட்வெல் மற்றும் டைலான் ஏஞ்சல் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.