கராச்சி: இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் பலரை பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று "கராச்சியின் லாந்தி சிறை"யில் அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானின் லாந்தி சிறையில் இருக்கும் 78 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளோம் என்று சிந்து மாகாண உள்துறை அமைச்சக அதிகாரி நசீம் சித்திக் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ரயில் மூலம் லாகூருக்கு கொண்டுவரப்பட்டு, வாகா எல்லையிலுள்ள இந்திய கடற்படை அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படுவார்கள்.
மேலும், இன்னும் 298 மீனவர்கள் லாந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய அதிகாரிகள் தரும் தகவல்களை கொண்டு, சிறையிலுள்ள மீனவர்களின் விவரங்களை சரிபார்த்து வருகிறோம். விரைவில் அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் எனக் கூறினார்.
லாந்தி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து இந்திய மீனவர்கள் கூறுகையில், தாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும், அவர்களது அன்புக்குரியவர்கள், உறவினர்கள் மீண்டும் வீடு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அரேபிய கடல் எல்லை தெளிவாக வரையறுக்கப்படாததால், இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் அடிக்கடி சட்டவிரோத மீன்பிடியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.