வாஷிங்டன்: வாஷிங்டனில் திருடுபோன சைக்கிளை, திருடனிடம் இருந்து திருடிக் கொண்டு வர உதவிய பேஸ்புக்குக்கு இளம் பெண் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜென்னி மோர்டோன் - ஹம்ப்ரேஸ் என்ற 30 வயது பெண்ணின் சைக்கிள் திருடு போனது. சைக்கிளைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அவரது நண்பர்கள், பேஸ்புக்கில் இதேப்போன்றதொரு சைக்கிள் விற்பனைக்கு என்ற விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து ஜென்னிக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சைக்கிள் திருடனை, சைச்கிள் வாங்க் கொள்வதாகக் கூறி ஓரிடத்துக்கு வரவழைத்து போலீஸில் பிடித்துக் கொடுக்க ஜென்னி திட்டமிட்டார். ஆனால் அது நடக்கவில்லை.
கடைசியாக, தன்னுடய சைக்கிளை, திருடனிடம் இருந்து தானே திருடி வந்தது குறித்து அவர் கூறியதாவது, இறுதியாக வாடிக்கையாளர் போல சைக்கிள் திருடனிடம் பேசி, சைக்கிள் பற்றி சில விஷயங்களைக் கேட்டு, அதனைவாங்கிக் கொள்வதாகக் கூறி ஓரிடத்துக்கு வரவைத்தேன்.
அப்போது, அவனிடம் இந்த சைக்கிள் பற்றி பல சந்தேகங்களைக் கேட்டேன். முழுதும் பேசிய பிறகு சைக்கிளின் பெடல் உயரமாக இருப்பது போல இருக்கிறது. அதனை ஓட்டிப் பார்க்கலாமா என்று கூறி, என் கையில் இருந்த சிகரெட் பெட்டி, பயனற்ற கீ செயின் போன்றவற்றை அவனிடம் கொடுத்துவிட்டு சைக்கிளை ஓட்டிப் பார்க்கக் கிளம்பினேன். அவ்வளவுதான் நிறுத்தவேயில்லை என்கிறார் சிரித்தபடி.
மேலும், சைக்கிளை விற்பனை செய்வதற்காக, அதில் இருந்த சின்ன சின்ன கோளாறுகள் சரி செய்யப்பட்டிருந்ததாகவும், முன்பக்க விளக்கு பொறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறி மகிழ்கிறார் ஜென்னி.