ஈரானில் ஊடுருவி உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரின்ஸ்டன் பல்கலையில் ஆராய்ச்சியாளராக இருப்பவர் ஜியூங் வாங் (37). பெய்ஜிங்கில் பிறந்த இவர், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அமைப்புகளுக்கு ஆதரவாக ஈரானில் ஊடுருவி உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, ஜியூங் வாங் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஈரான் போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அவர் கைதாவதற்கு முன்பாக, ஈரான் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய 4,500 ஆவணங்களை டிஜிட்டல் முறையில் நகல் எடுத்து வைத்துள்ளார்.
அதில் பல ரகசியமான ஆவணங்கள், ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு ஆவணக் காப்பகங்களிலிருந்தும், சில மாகாண கூட்டமைப்புகளின் நூலகங்களிலிருந்தும் திருடப்பட்டவை என்பது தெரியவந்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில் வாங் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஈரான் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், ஈரான் அநீதியான முறையில் கைது செய்து வைத்துள்ள அமெரிக்கர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசு அதிகாரி கூறுகையில், அமெரிக்கர்களையும், இதர வெளிநாட்டவர்களையும் தேசிய பாதுகாப்பு தொடர்பான போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் ஈரான் அரசு தொடர்ந்து கைது செய்து வஞ்சித்து வருகிறது என்றார்.