ஜெர்மனியில் பிரபல ரீகன்ஸ்பெர்க் டாம்ஸ்பாட்ஸன் என்கிற கத்தோலிக இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த இசைப்பள்ளியானது கடந்த 10-ம் நூற்றாண்டு முதல் செயல்படுகிறது.
இங்கு கடந்த 1964 முதல் 1994 வரை ரெவ்.ஜார்ஜ் ராட்ஸிங்கர் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். இவரது இளைய சகோதரர் ஜோஸப் ராட்ஸிங்கர் 2005 முதல் 2013 வரை போப் பென்டிக்ட்-ஆக இருந்தவர்.
இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு இங்கு பயிலும் மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்படுவதாக முதன்முதலில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், ஜோஸப் ராட்ஸிங்கர் முற்றிலும் மறுத்தார்.
இதையடுத்து உல்ரிச் வெப்பர் என்ற வழக்கறிஞர் இதுகுறித்து தனிநபர் விசாரணையில் இறங்கினார். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிந்து விவரங்கள் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது.
அதில், கடந்த 1960-70 காலகட்டத்தில் சுமார் 9 முதல் 11 வயது வரை உள்ள மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் இங்கேயே தங்கி இசைப் பயின்றவர்கள் ஆவர்.
அதுமட்டுமல்லாமல் இதுவரையில் அதாவது கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சுமார் 547 மாணவர்கள் வரை இதில் பாதிக்கப்பட்டுளதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவருக்கும் இந்த கத்தோலிக இசைப்பள்ளியின் மதபோதகர்கள், பாதிரியார்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 49 பேர் இக்குற்றச்செயலில் ஈடுபட்டு வன்கொடுமை அளித்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.