ரஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷிய கடற்கரையையொட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரஷிய கடற்கரையையொட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
ரஷியாவில் நிக்கோல் ஸ்கையோ என்ற இடத்துக்கு தென்கிழக்கே 199 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 11.7 கி.மீ. ஆழத்தை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது.
இதையடுத்து, உடனடியாக பசிபிக் கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.
இதனால், கடற்கரைப் பகுதிகளில் பேரலை இருக்காது எனவும் கடல்மட்டத்தில் சிறிய மாறுபாடுகள் மட்டுமே ஏற்படக்கூடும் என்றும் அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, ரஷியா-ஹாவாய் தீவுகளுக்கிடையிலான கடற்கரைப் பகுதிகளில் அலைகள் 0.3 மீட்டருக்கும் குறைவாக மேலெழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பெருவில் நிலநடுக்கம்: பெருவில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 7.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அரிகியூபா என்ற இடத்துக்கு மேற்கே 220 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 44 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கராவெலி பகுதியில் நன்கு உணரப்பட்டதாக மேயர் சாண்டியாகோ நெய்ரா தெரிவித்தார்.
தென் அமெரிக்க நாடான பெருவில் ஆண்டுக்கு சுமார் 200 முறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால், அதில் பெரும்பாலானவை பொதுமக்களால் உணரப்படுவதில்லை. பெருவில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 595 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com