சவுதி நாட்டின் இளவரசன் ஒருவரை தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டுவதும், கண்மூடித் தனமாக தாக்குவதும், மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டுவதும் போன்று வெளியான வீடியோவை தொடர்ந்து அவரைக் கைது செய்துள்ளது அந்த நாட்டு அரசாங்கம்.
சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு முன்பு வாகனத்தை நிறுத்தியதற்காக ஒரு நபரை ரத்தம் வரும் அளவிற்குக் கொடூரமாக அவர் தாக்கும் வீடியோ டிவிட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பரவியது. அதில் வருபவர் அந்த நாட்டின் இளவரசன் சவுத் பின் அப்துலாஸிஸ் பின் முசேட் பின் சவுத் பின் அப்துலாஸிஸ் என்பதை அறிந்து அனைவரும் அதிர்ந்தனர்.
சவுதியின் அதிகாரப் பூர்வ செய்தி ஊடகமான ‘அல்-இக்பரிய டிவி’ தெரிவித்துள்ள செய்தியின்படி இளவரசரின் தர குறைவான நடவடிக்கைகள் அவரது தந்தையே அவரைக் கைது செய்ய உத்தரவிடும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து ஒரு இளவரசராக அவருக்குக் கொடுக்கப்பட்ட அந்தஸ்து, மாதாந்திர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்ட பணம் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது.
ஒரு காணொளியில் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒருவரை திடீர் என்று தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டியவாறே தாக்குகிறார். அடி வாங்குபவர் மன்னிப்பு கேட்டவாறே விட்டு விடுங்கள் என்று கதறுவதை சற்றும் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக அவரைத் தாக்குகிறார் இளவரசர். மற்றொரு வீடியோவில் இருவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியவரே துரத்துகிறார். இந்தக் காணொளிகள் அனைத்தும் அவருக்கு எதிரான சாட்சிகளாய் கருதப்பட்டு அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ மக்களிடையே கோவத்தை ஏற்படுத்தினாலும், மகன் என்றும் பாராமல் அரசர் சாலமன் அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது, அவர்களின் கோபத்தை குறைத்து, அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழக்காமல் காப்பாற்றியுள்ளது.