இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்}பாக்தாதி இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜேம்ஸ் மேட்டிஸ் மேலும் கூறியது: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல்}பாக்தாதி இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நம்ப இடமிருக்கிறது. அவர் இறந்துவிட்டார் என்று மிகவும் நம்பத் தகுந்த தகவல்கள் கிடைக்கும் வரையில் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்றே நான்கருதுவேன். அதே நம்பிக்கையுடன் அவருக்கு எதிரான புதிய தாக்குதல்களைத் திட்டமிடுவோம்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் அன்றாட செயல்பாடுகளில் அவர் ஈடுபடுவதில்லை என்று கூறப்படுவது இன்றைய அளவில் ஏற்கத் தகுந்த தகவல். இருந்தபோதிலும், அந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் அவர் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறார் என்றே கருத இடமுள்ளது என்றார் ஜேம்ஸ் மேட்டிஸ்.
இராக்கில் உள்ள மொசூல் நகரை கடந்த 2014}ஆம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற அல்}நூரி மசூதியில் பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்}பாக்தாதி, இஸ்லாமிய தேசமான கலீஃபா அமைந்ததாக அறிவித்தார். அதன் பிறகு வேறு எந்த இடத்திலும் அவர் நேரடியாகக் காணப்பட்டதில்லை. அவர் பெயரில் அறிக்கைகளோ கட்டளைகளோ வெளியாவது நின்றும் நீண்ட காலமாகிவிட்டது.
அல்}பாக்தாதியைக் குறி வைத்து அமெரிக்கா நிகழ்த்திய பல்வேறு வான்வழித் தாக்குதல்களில் அவர் இறந்துவிட்டதாகப் பல முறை செய்திகள் வெளியானபோதிலும் அது உறுதி செய்யப்படவில்லை.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷியாவும் வான் வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த மாதம் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலின்போது, அல்}பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம் என்று ரஷியா அறிவித்தது. ஆனால் அந்த செய்தியும் உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே, மொசூல் நகரம் முற்றிலுமாக பயங்கரவாதிகளிடமிருந்து அண்மையில் மீட்கப்பட்டது. இறுதித் தாக்குதல் நடவடிக்கையில் அல்}பாக்தாதி கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. மொசூல் நகர மீட்புக்குப் பிறகு, ஐ.எஸ். மூத்த தளபதிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் அல்}பாக்தாதி இறந்துவிட்டார் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான், அவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்று நம்ப இடமிருக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.