ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குலே தாவா கானா என்ற இடத்தில் கார் ஒன்று திங்கள்கிழமை காலை வெடித்துச் சிதறியது.
இந்த இடமானது ஆஃப்கானிஸ்தான் அரசின் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லாவின் இரண்டாம் உதவியாளர் முகமது மோஹகிக் என்பவரது வீட்டின் அருகில் நிகழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போன்று காட்சியளித்தது. மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அங்கிருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல் காரணமாக சிறிது நேரம் அப்பகுதி முழுவதும் பதட்டமாக காணப்பட்டது.
இந்நிலையில், அது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதல் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான தாலிபான் பொறுப்பேற்றுள்ளது.
மேலும், அந்நாட்டின் உளவுத்துறை பிரிவின் ஊழியர்கள் பயணிக்கும் பேருந்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு அந்த காரில் குண்டு வைத்ததாக தாலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 24 பேர் உயரிழந்தனர். மேலும் பலர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் அப்பகுதியில் இருந்த சுமார் 15 கடைகள் வரை சேதமடைந்தன.