அமெரிக்காவுக்கு பணி நிமித்தமாக அல்லது உயர்கல்வி பயிலச் செல்லும் வெளிநாட்டவர்களுக்கான எச்1பி விசா நடைமுறைக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அங்கு செல்ல இருந்த வெளிநாட்டவர்கள் சிரமத்துக்கு உள்ளாயினர்.
ஒரு ஆண்டுக்கு மட்டும் 65,000 பேர் எச்1பி விசாவுக்காக விண்ணப்பித்து வருகின்றனர். அதிலும் அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகையாக ப்ரீமியம் பிரிவில் விண்ணப்பம் வழங்கும் நடைமுறை உள்ளது. இதில் ஆண்டுக்கு சுமார் 20,000 பேர் வரை விண்ணப்பித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த ப்ரீமியம் பிரிவுக்கான எச்1பி விசா வழங்கும் நடவடிக்கை தற்போது வேகமெடுத்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிரமமின்றி இருக்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதாக குடியுரிமை ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இந்த ப்ரீமியம் பிரிவில் விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு விரைவில் எச்1பி விசா வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் இந்த நடைமுறை அடிப்படையில் எச்1பி விசா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பணியாளர்களுக்கு அமெரிக்கா வழங்கி வரும் எச்1பி விசாவுக்கு அதிபர் டிரம்பின் நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் எச்1பி விசா வழங்கப்பட்டது.
இதையடுத்து, எச்1பி விசா பெற விண்ணப்பிக்க முயற்சிப்பவர்களை ஒ பிரிவு விசாவுக்கு விண்ணப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக இந்திய பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
ஒ பிரிவு விசா என்பது தங்கள் துறையில் அதிக திறன் வாய்ந்தவர்கள் மற்றும் தாங்கள் சார்ந்த துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அமெரிக்கா வழங்குவதாகும். ஒ பிரிவு விசாவுக்கு எவ்வித எண்ணிக்கை கட்டுப்பாடும் இல்லை.