ஒட்டாவா: தங்களது மத சம்பிரதாயம் அனுமதிக்கிறது என்று கூறி ஒரே நேரத்தில் 25 பேரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த கனடா நாட்டு மதத்தலைவர் மீது அந்நாட்டு பலதார மணச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்துவத்தினை பின்பற்றும் பல்வேறு இனக்குழுவினர் உண்டு. அவர்களில் மோர்மோன் இனக்குழுவினரும் ஒருவர். காலப்போக்கில் இவர்களிலொரு சிறு பிரிவினர் தனியாக பிரிந்து தாங்கள் 'லாட்டர் டே ஸைன்ட்ஸ்' என்னும் தனிப் பிரிவினருக்கான இயேசு ஆலய வழிபாட்டு முறையினை பின்பற்றுபவர்கள் என்று அறிவித்துக் கொண்டனர்.
இவர்கள் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள உடா மற்றும் அரிசோனா மாகாணங்களின் எல்லைப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். அத்துடன் இயல்பிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து வாழ்வதில் நம்பிக்கையுடையவர்கள்.
இந்த குழுவினரைச் சேர்ந்த, தற்பொழுது கனடாவில் வசித்து வரும் வின்ஸ்டன் பிளாக்மோர் மற்றும் ஜேம்ஸ் ஒலர் ஆகிய இரு மதத்தலைவர்கள் மீதுதான் கனடாவின் பலதார மணச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் வின்ஸ்டன் பிளாக்மோர் 25 பெண்களுடனும், ஜேம்ஸ் ஒலர் 5 பெண்களுடனும் ஓர் நேரத்தில் திருமணம் செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு 1990-களின் முற்பகுதியில் இருந்து நடந்து வருகிறது. ஆனால் கனடா நாட்டு சட்டத்தில் பலதார மணம் குறித்து ஒரு தெளிவான சட்டம் இல்லாத இல்லாத காரணத்தால் இந்த வழக்கு இழுத்தடித்துக் கொண்டு இருந்தது. ஆனால் 2011-ஆம் ஆண்டு எழுந்த ஒரு அரசியலமைப்பு சட்ட பிரச்சினையின் பொழுது, கனடா நாட்டு புதிய பலதார மண சட்டமானது செல்லுபடியாகும் என்றும், அது எந்த ஒரு மதத்திற்கும் எதிராக இல்லை என்றும் தீர்ப்பு வந்தது. இதனைத் தொடந்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்து, பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்காண சாட்சி விசாரணையின் பொழுது வின்ஸ்டன் பிளாக்மோரின் முன்னாள் மனைவியான ஜேன் பிளாக்மோர் முக்கிய சாட்சியாக இருந்தார். அத்துடன் 2008-ஆம் ஆண்டு டெக்ஸாம்ஸ் மாகாண தேவாலயம் ஒன்றில் கிடைத்த திருமண ஆவணங்களும் முக்கிய சாட்சி ஆவணங்களாகத் திகழ்ந்தன. அவற்றை பெரிதாக ஏற்க வேண்டாம் என்ற வின்ஸ்டன் பிளாக்மோர் தரப்பு வாதங்களை நீதிபதி ஏற்கவில்லை.
தனது தீர்ப்பில் நீதிபதி ஆன் டொனெகன்,’கிடைத்துள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் வின்ஸ்டன் பிளாக்மோர் 25 பெண்களுடனும், ஜேம்ஸ் ஒலர் 5 பெண்களுடனும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படுமென்றுஅவர் தெரிவித்தார். தற்பொழுதைய கனடா நாட்டு சட்டத்தின்படி அவர்களிருவருக்கும் தலா 5 ஆண்டு காலம் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வின்ஸ்டன் பிளாக்மோர், 'தன்னுடைய மதத்தினை பின்பற்றுவதுதான் தான் செய்த குற்றம் என்றும், தான் எப்பொழுதும் திருமணங்களை செய்ததனை மறைக்கவில்லை என்றும், இவை அனைத்தும் தனது மத நம்பிக்கையின்படியான 'தெய்வீக' திருமணங்கள் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் கனடா நாட்டின் பலதார மண சட்டத்தினை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாகவும் பிளாக்மோரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.