மோரா புயலின்போது இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்ட 33 வங்கதேச மீனவர்கள், வியாழக்கிழமை தாயகம் திரும்பினர்.
அவர்கள் அனைவரையும் இந்திய கடற்படையினர் பத்திரமாக அழைத்துச் சென்று அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மோரா புயலாக உருவெடுத்தது. அது வங்கதேசக் கடல் பகுதி அருகே இரு நாள்களுக்கு முன்பு கரையைக் கடந்தது.
அந்தத் தருணத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் அந்நாட்டு கடற்படையினர் ஈடுபட்டனர். மீட்புக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. இந்தச் சூழலில், வங்காள விரிகுடாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையினர் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 33 வங்கதேச மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு இந்தியா அழைத்து வந்தனர். அவர்கள் அனைவருக்கும் தேவையான முதலுதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அவர்கள் அனைவரையும் இந்திய கடற்படையினர் வங்கதேச அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் இந்திய அதிகாரிகள் அப்போது வழங்கினர்.
இதனிடையே, குதூபியா தீவில் தஞ்சமடைந்திருந்த வங்கதேச மீனவர்கள் 20 பேரை அந்நாட்டு கடற்படையினர் வியாழக்கிழமை மீட்டு தாயகம் அழைத்துச் சென்றாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.