பேங்காக்: தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்து சமூக வலைத்தளமான முகநூலில் தொடர் பதிவுகள் எழுதியவருக்கு, 30 ஆண்டுகள் சிறைதணடனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
தாய்லாந்தின் சியாங் மாய் நகரைச் சேர்ந்தவர் விசாய். இவர் கடந்த 2015-ஆம் வருடம் டிசம்பர் மாதம் தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்து, பிரபல சமூக வலைத்தளமான முகநூலில் தொடர்ந்து பதிவுகள் எழுதினார். இதன் காரணமாக அரச குடும்பத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டி 'லெஸ் மெஜஸ்தி' எனும் சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
'லெஸ் மெஜஸ்தி' சட்டத்தின் படி அரச குடும்பத்தினரை அவமரியாதை செய்வதோ, அவமானப்படுத்துவதோ அல்லது மிரட்டுவதோ, குற்றவியல் சட்டத்தின்படி 15 ஆண்டு காலம் வரை தணடனை விதிக்கக் கூடிய குற்றமாகும். கடந்த 2014, மே மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சிக்குப் பிறகு, இந்தப் பிரிவுகளில் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
ராணுவம் பெரும்பாலும் இத்தகைய வழக்குகளை சிவில் நீதிமன்றத்திற்கு பதிலாக ராணுவ நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடும். அங்கே சிவில் நீதிமன்றத்தினை விட இரு மடங்கு தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கமாகும்.
வழக்கை விசாரித்த அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், 10 குற்றசாட்டுகளை அவர் மீது சுமத்தி, அவருக்கு முதலில் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆனால் விசாய் தன்னுடைய குற்றத்தினை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டதால், அவருடைய தண்டனை 30 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இந்த தணடனை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையமானது, கருத்துரிமையை மதித்து நடக்குமாறு தாய்லாந்திற்கு அறிவுறுத்தியுள்ளது.