அஸ்தானா: பயங்கரவாதம் என்னும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்: என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் சேர்ந்து 'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு' என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சிறப்பு பார்வையாளர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தற்பொழுது கஜகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் நேற்று முதல் நடைபெறுகிறது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று இந்தியாவும், பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக அதிகாரப்பூர்வமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புக்கு பின்னர் அங்கு பேசிய இந்திய பிரதமர் மோடி தெரிவித்ததாவது:
12 வருட ஆய்வுக்கு பின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கு எனது நன்றி. பயங்கரவாத பயிற்சி, ஆள் எடுத்தல், நிதியுதவி ஆகியவற்றிற்கு எதிராக, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு தீர்வு கிடைக்காது. பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.