தெஹ்ரான்: கடந்த வாரம் ஈரான் நாட்டு பாராளுமன்றம் மற்றும் அருகே உள்ள வழிபட்டுத் தலம் என இரண்டு இடடங்களில் நடந்த தற்கொலை படை தாக்குதலுக்கு, பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்ட முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு பாராளுமன்றம் அமைந்துள்ளது. அருகே மறைந்த புரட்சியாளரும் முக்கிய மதகுருவுமான கோமெனியின் அடக்கத் தலம் அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் கடந்த புதன்கிழமை அன்று புகுந்த தற்கொலை படை தீவிரவாதிகள் , குண்டுகளை வெடிக்கச் செய்ததோடு, துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இந்த இரண்டு தாக்குதல்களில் சேர்த்து பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் உட்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளியை, ஈரான் நாட்டு பாதுகாப்பு படையினர் நேற்று இரவு சுட்டுக்கொன்று விட்டனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மக்மூத் அலாவி தரப்பிலிருந்து செய்தி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.