பிரிட்டன் அரசி எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் (96) மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இளவரசர் பிலிப் நோய்த் தொற்று காரணமாக லண்டனிலுள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மருத்துவமனையில் அவசர சிகிக்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை வீடு திரும்பினார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறுநீர்ப்பையில் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்ட இளவரசர் பிலிப் கடந்த 2012-முதல் அதற்காக இரண்டு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், 2011-ஆம் ஆண்டு இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.