பிரேசிலில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
எஸ்பிரிட்டோ சான்டோ மாகாணத்தில் கருங்கற்களை ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக பேருந்து மற்றும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மீது வேகமாக மோதியது. வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இதில், பேருந்தில் சென்ற பயணிகள் 13 பேரும் அடங்குவர்.
மேலும், 13 பேர் காயமடைந்து அருகில் உள்ள குவாரபாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இந்த மாதத்தில் நிகழும் மூன்றாவது பெரிய சாலை விபத்து என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக சுகாதார அமைப்பின் 2013-ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தில் பிரேசிலில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளினால் 47,000 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.