இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7-வது அரை சதத்தையும், ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தனது 47-வது அரை சதத்தையும் நேற்று பதிவு செய்து உலக சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து டெர்பி நகரில் 11வது ஒரு நாள் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இங்தியா உட்பட 8 அணிகள் மோதும் இந்தப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தை இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய துவக்க ஆட்டகாரர்களான பூணம் ராத், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தாலும் மூன்றாவதாகக் களம் இறங்கிய கேப்டன் மிதாலி ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பல பந்துகளை பௌண்டிரிக்கு பறக்கவிட்ட மிதாலி மிக வேகமாக 50 ரன்களை குவித்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7-வது அரை சதத்தை அடித்து உலக சாதனை புரிந்தார். இவருக்கு முன்பு 6 அரை சதங்களை அடித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லிண்ட்சே, பெர்ரி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லொட்டி ஆகியோர் முன்னிலை வகித்திருந்தனர். இந்த சாதனைகளை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த மிதாலி.
71 ரன்கள் எடுத்த நிலையில் மிதாலி ஆட்டமிழக்க, இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை இந்திய அணி குவித்திருந்தது. இந்த இலக்கை எட்ட முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் முடிவில் 246 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றனர். ஆட்ட நாயகியாகவும் கேப்டன் மிதாலி தேர்வு செய்யப்பட்டார்.