ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
மத்திய ஜப்பானில் உள்ள மலையகப் பகுதியான நாகனோ பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு (உள்ளூர் நேரம்) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 7 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கம் காரணமாக, வயதான மூதாட்டி உள்பட இரண்டு பெண்கள் லேசான காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடுமையான அதிர்வுகள் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. ஏராளமான வீட்டுக் கூரைகளில் பொருத்தப்பட்டிருந்த ஓடுகள் மற்றும் கண்ணாடித் தகடுகள் விழுந்து நொறுங்கின.
நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.